குழந்தை வளர்ப்பு -08:'வாய்மையோடு வாழ்வோம்!'


‘நீண்ட ஜீப்பா, தாடி-தொப்பி, ஐவேளைத் தழும்பாகிப் போன நெற்றி’ – என்று புறத்தோற்றத்தில் பளிச்சென்று சான்று கூறும் முஸ்லிம்கள், தங்களுடைய அகவாழ்வில் இந்தத் தோற்றங்களுக்கு ‘ஜீவனைப்’ பிரதிபலிப்பதில்லை! 

இவர்கள் தங்கள் அலுவலகங்களுக்குத் தாமதமாகச் செல்வார்கள். வணிகத் தலங்களில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவார்கள். போக்குவரத்து விதிகளை சர்வசாதாரணமாக மீறுவார்கள். அண்டை – அயலாரிடம் பிணங்கி நிற்பார்கள். 

இவர்களிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் பெயருக்குக் கூட இருக்காது. வாக்குறுதிகளைப் பேண மாட்டார்கள். வாய்த் திறந்தாலே பொய்யாக கொட்டுவார்கள்.


இத்தகைய பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரைகள் சொல்லும்போது, அது அந்தக் குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய பிரதிபலிப்பையும், பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

நபிகளாரின் அன்புத் துணைவியார் அன்னை ஆயிஷா அம்மையார் (இறையருள் பொழிவதாக!) அறிவிக்கிறார்கள்: “இறைத்தூதரைப் பொறுத்தவரை பொய்யை வெறுத்ததுப் போல வேறு எதையும் வெறுத்ததில்லை. ஒரு மனிதன் பொய் சொன்னான் என்ற செய்தியை நபிகளார் கேள்விப்பட்டால்.. அந்த மனிதன் மனம் திருந்தி இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேட்டான் என்ற செய்தி வரும்வரை அந்த மனிதனின் கண்ணியத்தையும், மரியாதையையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை!” (அஹ்மது)

“இறைவனின் தூதரே!  ஒரு முஸ்லிம் கோழையாக இருக்கலாமா?”

“ஆம்.. இருக்கலாம்!”

“…. ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருக்கலாமா?”

“ஆம்.. அவனொரு கஞ்சனாகக்கூட இருக்கலாம்!”

“ஒரு முஸ்லிம் பொய் சொல்பவனாக இருக்கலாமா இறைவனின் தூதரே?”

“கூடவே கூடாது!”

-இது நபிகளாருக்கும், நபித்தோழர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்.


கோழைத்தனமும், கஞ்சத்தனமும் மனித பலவீனங்களாக கருதி பொறுத்துக் கொள்ளும் நபிகளார் பொய்மையை மட்டும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

“சுவனம் புகாத மூன்று நபர்களில் ஒருவன் பொய்யன்!”- என்று இன்னொரு இடத்தில் நபிகளார் எச்சரிக்கிறார்கள்.

குழந்தைகளிடம், “பொய் சொல்லாதீர்கள்!” – என்று அறிவுறுத்தும் பெற்றோர் தொலைபேசி மணி ஒலித்ததும், “நான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு!” – என்று வாய்க் கூசாமல் பொய் சொல்லத் தூண்டுவார்கள். 

எதிர்மாறான இந்த முரண்பாடுகளால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் திட்டவட்டமான செய்தி இதுதான்: “வாய்மைப் பண்பு நடைமுறைக்குச் சாத்தியப்படாது!”

உண்மையில், பெற்றோர்கள்தான் குழந்தைகளைப் பொய்ச் சொல்லத் தூண்டுகிறார்கள்; பொய் சொல்ல வைக்கிறார்கள்.

துரதிஷ்டவசமாக முஸ்லிம்கள் இறைத்தூதர் முஹம்மது நபிகளாரின் (இறைவனின் சாந்தியும், சமாதானமும் அன்பு நபிகளார் மீது பொழிவதாக!) வழிமுறைகளைப் பின்பற்றாததோடு திருக்குர்ஆன் – திருநபிகளாரின் அறிவுரைகளுக்கு மாற்றமாக நடந்து கொள்கிறார்கள்.

“மற்றவர்களைப் போல பிரதிபலிப்பவர்கள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்!” – என்கிறார்கள் அன்பு நபிகளார். (அஹ்மது, அபூதாவூது)


குழந்தைகளின் இதயங்களில் வாய்மையை விதைக்கச் சொல்கிறது இஸ்லாம். பொய்மையை  வெறுத்து ஒதுக்கும்படி அது அறிவுறுத்துகிறது.

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (இறையருள் பொழிவதாக!) அறிவிக்கிறார்கள்: “ஒருமுறை நான் நபிகளாரின் வீட்டில் இருந்தேன். அப்போது எனது அம்மா அங்கு வந்தார்கள். ‘உனக்கொன்று தருகிறேன் வா!” – என்று அழைத்தார்கள். “குழந்தைக்கு என்ன தரப்போகிறீர்கள்?” – என்று நபிகளார் அம்மாவிடம் விசாரித்தார்கள். எனது அம்மா, “பேரீத்தம் பழம் தரப் போகிறேன் இறைவனின் தூதரே!” – என்றார்கள். “நல்லவேளை! ஒருவேளை நீங்கள் இந்தப் பேரீத்தம் பழம் தரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் செயல் உங்கள் பதிவேட்டில் பொய் ஒன்றை பதித்துவிடும்!” – என்று நபிகளார் அறிவுறுத்தினார்கள்” (அபூதாவூது)

குழந்தைகள் வாய்மையோடு வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கு நபிகளார் காட்டிய அக்கறை பிரமிப்பூட்டுகிறது. ஆனால், இந்த அறிவுரைகளின் நேர்மாற்றமாகவே இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கை உள்ளது.

கேளிக்கை விழாக்கள், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கெடுப்பது, குழந்தைகளை செயற்றையாக ‘மேக் அஃப் – ஒப்பனைச்’ செய்யத் தூண்டுவது போன்றவற்றில் அக்கறை காட்டத் தூண்டும் பெற்றோர் இஸ்லாத்தின் தூய கோட்பாடுகளை அறிவுறுத்த மறந்துவிட்டார்கள். இந்தக் கலாச்சாரச் சிதைவால் இளந்தலை முறையினர் பெரும் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். 

கடைசியில், இறைமறையும், இறைத்தூதரின் வழிமுறையும் பின்பற்றி வாழும் உண்மை முஸ்லிம்கள் ‘அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள்’ என்று அவப் பெயர் சூட்டப்படுகிறார்கள். அதாவது திருக்குர்ஆன, திருநபிகளாரின் அறிவுரைகளின் படி ஒழுக்கமாண்புகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் தீவிரவாதிகள்! ஆனால், ஒழுக்க ஈனங்களில் மூழ்கியிருப்பவர்கள் பகுத்தறிவாதிகள்; முற்போக்குவாதிகள்!



Related

குழந்தை வளர்ப்பு 691683289223230006

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress