ரியாஸ் எழுத்தாளனாகின்றான் - 14, "எம் மவனைக் காப்பாத்துங்க!"



"இன்னைக்கு முடியாது! நாளை பார்க்கலாம் போ! நிறைய வேலையிருக்கு எனக்கு!"

"அய்யா, எம் மவன் நிரபராதிங்க! நாங்க உழைச்சு வாழறவங்க. திருட எங்களுக்குத்  தெரியாதய்யா! கழனியிலே வேலை செஞ்சிட்டிருந்த எம் மவனை போலீஸ் புடுச்சிட்டுப் போயிடுச்சய்யா. யாரோ சைக்கிள் திருடினாங்களாம். சம்பந்தமில்லாம எங்க மேலே பழியைச் சுமத்திட்டாங்க. நீங்க தயவு செஞ்சு ஒரே ஒரு போன் செஞ்சா போதுமய்யா"

"அய்யா! அய்யா! தயவு பண்ணுங்க!"

"ஏன்யா நான் சொல்றேனுல்லே. போ..போ.. நாளைக்குப் பார்க்கலாம்!" - பண்ணையார் அலட்சியமாக விரட்டினார். 

முருகன் சோகமாக எழுந்து நடந்தான்.

"இன்னும் எத்தனை முறைதான் கெஞ்சறது? எல்லாம் என் விதி!" - நொந்தபடியே குடிசைக்குத் திரும்பினான். 

வீட்டில் மனைவி அஞ்சலை அழுதபடி ஒரு மூலையில் படுத்திருந்தாள். 

முருகனைக் கண்டதும், "என்னய்யா ஆச்சு? பண்ணையார் என்ன சொன்னாரு?"- என்று ஆவலுடன் ஓடி வந்து கேட்டாள். 

"ஏன்தான் இந்த ஆண்டவன் இப்படி சோதிக்கிறானோ? ம்.."- என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே, "பண்ணையார் நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்லிட்டார் புள்ளே!" - என்றான் முருகன்.

விரக்தியுடன் சுவரில் சாய்ந்த முருகனின் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.

"போலீஸ்கிட்ட மாட்டிகிட்டு என் மவன் என்ன பாடுபடறானோ? இனி அவன் திரும்பமாட்டான்னு ஊரெல்லாம் பேசுதே! அய்யோ கடவுளே! நான் என்ன செய்வேன்?"- அஞ்சலை ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தாள்.


அந்தச் சமயம் வெளியே திபு திபுவென்று யாரோ கூச்சலிட்டுக் கொண்டே ஓடுவது கேட்டது.

பதறிப் போய் முருகன் குடிசையைவிட்டு வெளியே ஓடி வந்தான்.

அங்கே, கிராம மக்கள் கும்பல் கும்பலாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை நிறுத்தி என்ன ஏது என்று முருகன் விசாரித்தான். 

"நம்ம பண்ணையார் புள்ள விளையாடிக்கிட்டிருக்கும்போது கிணத்துலே விழுந்துட்டானாம்!"

செய்தியைக் கேட்டு பண்ணையார் பிள்ளையைக் காப்பாற்ற ஓட இருந்த முருகன் சட்டென்று நின்றுவிட்டான். "கல்லு மனசு பண்ணையார்! நல்லா வேதனைப்படட்டும்!"- என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

அப்போது, "அய்யோ என் குழந்தை..! என் குழுந்தை..!"- என்று பண்ணையாரும் அவரது மனைவியும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதவாறு வந்து கொண்டிருந்தார்கள்.

மகனைப் பிரிந்த வேதனைத் தாளாமல் குடிசையில், அஞ்சலை மயங்கிக் கிடந்தாள்.

"பிள்ளையைப் பிரிந்த பெற்றோர் வேதனை எல்லோருக்கும் பொதுதானே! முருகா! பாவம் அந்த பண்ணையார்! ஓடு..ஓடு.. அவரது பிள்ளையைக் காப்பாத்து!"


மனசாட்சி முருகனை விரட்ட அவன் தன் கோபத்தை மறந்தான். வீட்டிலிருந்து ஒரு நீளமான கயிற்றை எடுத்துக் கொண்டான். கிணற்றை நோக்கி குறுக்கு வழியில் ஓடினான். சேறு, சகதி, முட்கள், கற்கள் எதையும் அவன் சட்டை செய்யவில்லை. அவனது மனமெல்லாம் பிள்ளைப் பாசத்தால் நிறைந்திருந்தது. 

கிராமவாசிகள் தொலைவில் இன்னும் ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

இன்னும் சிலர் கிணற்றைச் சுற்றி கூட்டம் சேர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

"தள்ளுங்கய்யா..!"- என்று அதட்டிய முருகன் கயிற்றைக் கிணற்றுப் பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் கட்டினான். மறுமுனையைப் பிடித்துக் கொண்டு சரேலென்று கிணற்றில் குதித்தான். நீரில் மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்த சிறுவனின் தலை முடியைப் பிடித்து மேலே தூக்கியவன், அவனைக் கிணற்றின் சுவரோரமாய் இழுத்து வந்தான். பிறகு தோளில் போட்டுக் கொண்டு கிணற்றிலிருந்து வெளியேறினான்.

நல்லவேளை. சிறுவனுக்கு ஒன்றுமாகவில்லை.

அதற்குள் பண்ணையாரும், அங்கு வந்துவிட்டார்.

முருகன் சிறுவனை அவரிடம் ஒப்படைத்தான். ஏதும் பேசாமல் மௌனமாக திரும்பி நடந்தான்.

"முருகா!"- என்று பண்ணையார் அழைத்தார். நின்றவன் அவரைப் பார்த்தான்.

பிள்ளை கிடைத்த மகிழ்ச்சிப் பார்வை ஒருபுறம். பிள்ளையைப் பிரிந்திருப்பதால் வேதனைப் பார்வை மறுபுறம்.

நான்கு விழிகளும் சந்தித்துக் கொண்டன.

"வா... போலாம் டேஷனுக்கு.."- என்றார் பண்ணையார் முருகனின் தோளில் கையைப் போட்டவாறே!


ரியாஸ் எழுதின கதை உங்களுக்குப் பிடிச்சிருக்கா..?

--- தொடரும்.

Related

சிறுவர் தொடர் 8489096712589845631

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress